இன்றைக்கும் சுதா சேஷய்யன் கதைக்கு போயிருந்தேன். மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள் இன்று கேட்டதில்.
- விவேகானந்தர் தன் குருவை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். கடவுளை பார்த்திருக்கீர்களா என்று சிலரிடம் கேட்டபோது பின்வாங்கினார்கள். மற்ற சிலரை கடவுளை பார்த்திருந்ததாக சொன்னால்அவரை எனக்கு காண்பிக்க முடியுமா என்று கேட்டபோது பின்வாங்கினார்கள். ராமகிருஷ்ணரை பார்த்தார். கடவுளை பார்த்திருக்கீர்களா என்று கேட்டபோது பார்த்திருக்கிறேன் என்றார். எனக்கு காண்பிக்கமுடியுமா என்று கேட்டார். முடியும் என்றார் ராமகிருஷ்ணர். விவேகானந்தருக்கு மிக்க மகிழ்ச்சி. ராமகிருஷ்ணர் தொடர்ந்தார். நான்காண்பித்துவிடுவேன். பார்ப்பதும் பார்காததும் உன் கையில் இருக்கிறது என்றார்!
- கண்ணதாசன் கடவுளிடம் தன் சந்தேகங்களை கேள்விகளாகக் கேட்கிறார்! அருமையான கவிதை!
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!